2.25 திருப்புகலி - இந்தளம்
 
1731. உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே!
1
உரை
   
1732. பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக்
கண்ணியார், கமழ் கொன்றை சேர் முடிப்
புண்ணியன், உறையும் புகலியை
நண்ணுமின், நலம் ஆன வேண்டிலே!
2
உரை
   
1733. வீசும் மின் புரை காதல் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்,
பூசும் நீற்றினன், பூம் புகலியைப்
பேசுமின், பெரிது இன்பம் ஆகவே!
3
உரை
   
1734. கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்,
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்,
பொடி கொள் மேனியன், பூம் புகலியுள
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே!
4
உரை
   
1735. பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன்,
ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப்
பூதத்தான், புகலிநகர் தொழ,
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே.
5
உரை
   
1736. மறையினான் ஒலி மல்கு வீணையன்,
நிறையின் ஆர் நிமிர்புன்சடையன், எம்
பொறையினான், உறையும் புகலியை
நிறையினால் தொழ, நேசம் ஆகுமே.
6
உரை
   
1737. கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான்,
இரவுஇடைப் பலி கொள்ளும் எம் இறை,
பொரு விடை உயர்த்தான், புகலியைப்
பரவிட, பயில் பாவம் பாறுமே.
7
உரை
   
1738. அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,
விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான், பொழில் ஆர் புகலிஊர்
இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!
8
உரை
   
1739. மாலும், நான்முகன்தானும், வார் கழல்
சீலமும் முடி தேட, நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள
பாலது ஆடிய பண்பன் அல்லனே?
9
உரை
   
1740. நின்று துய்ப்பவர், நீசர்தேரர், சொல்
ஒன்றுஅதுஆக வையா உணர்வினுள்
நின்றவன் நிகழும் புகலியைச்
சென்று கைதொழ, செல்வம் ஆகுமே.
10
உரை
   
1741. புல்லம் ஏறிதன் பூம் புகலியை,
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலைஈர் ஐந்தும் வல்லவர்க்கு,
இல்லை ஆம் வினை, இரு நிலத்துளே.
11
உரை