2.32 திருஐயாறு - திருவிராகம் - இந்தளம்
 
1808. திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர்
மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.
1
உரை
   
1809. கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர்
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும்
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார,
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே.
2
உரை
   
1810. கட்டு வடம் எட்டும் உறு வட்டமுழவத்தில்
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் சீர்
வட்டமதிலுள் திகழும் வண் திரு ஐயாறே.
3
உரை
   
1811. நண்ணி ஒர் வடத்தின்நிழல் நால்வர்முனிவர்க்கு, அன்று,
எண் இலிமறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்த்
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே.
4
உரை
   
1812. வென்றி மிகு தாருகனது ஆர் உயிர் மடங்க,
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ,
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர்மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே.
5
உரை
   
1813. பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,
பாத முதல் பைஅரவு கொண்டு அணி பெறுத்தி,
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.
6
உரை
   
1814. துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த,
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே,
"என்ன சதி?" என்று உரைசெய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.
7
உரை
   
1815. இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர்
அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத்
துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர்
வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே.
8
உரை
   
1816. பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப்
பெருத்த உருஅது ஆய் உலகு இடந்தவனும், என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார்
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.
9
உரை
   
1817. பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர்
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்,
நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால்
மாகம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.
10
உரை
   
1818. வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை, எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்,
நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.
11
உரை