2.37 திருமறைக்காடு - கதவு அடைக்கப் பாடிய பதிகம் - இந்தளம்
 
1862. சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!
1
உரை
   
1863. சங்கம், தரளம் அவை, தான் கரைக்கு எற்றும்
வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல்,
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே?
2
உரை
   
1864. குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல்
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே?
3
உரை
   
1865. படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம்,
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல்,
கடல் நஞ்சு அமுதாஅது உண்ட கருத்தே?
4
உரை
   
1866. வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல்,
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?
5
உரை
   
1867. பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி,
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா!
உலகுஏழ் உடையாய்! கடைதோறும் முன், என்கொல்,
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே?
6
உரை
   
1868. வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா!
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன், என்கொல்,
கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே?
7
உரை
   
1869. கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரைமேல்
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா!
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த,
அலங்கல் விரல் ஊன்றி, அருள்செய்தஆறே?
8
உரை
   
1870. கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனம் கழுகு ஆனவர், உன்னை முன், என்கொல்,
வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?
9
உரை
   
1871. வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற,
ஓதம் உலவும், மறைக்காட்டில் உறைவாய்!
ஏதில் சமண்சாக்கியர் வாக்குஇவை, என்கொல்,
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே?
10
உரை
   
1872. காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார்,
வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.
11
உரை