2.59 சீகாழி - காந்தாரம்
 
2102. நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
"வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்!" என
                                                            ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.
1
உரை
   
2103. ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
"நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா!" என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.
2
உரை
   
2104. வடி கொள் பொழிலில் மழலை வரிவண்டு இசைசெய்ய,
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலிக் காழி,
"முடி கொள் சடையாய்! முதல்வா!" என்று முயன்று ஏத்தி,
அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லல் அவலமே.
3
உரை
   
2105. மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி,
"பனைக்கைப் பகட்டு ஈர் உரியாய்! பெரியாய்!" எனப்
                                                        பேணி,
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.
4
உரை
   
2106. பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக் காழி,
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானைக்
கருதி எழுமின், வழுவா வண்ணம்! துயர் போமே.
5
உரை
   
2107. மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ, வரிவண்டு இசை செய் கலிக் காழி,
"பந்தம் நீங்க அருளும் பரனே!" என ஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.
6
உரை
   
2108. புயல் ஆர் பூமி நாமம் ஓதி, புகழ் மல்க,
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலிக் காழிப்
பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுது ஏத்த
முயல்வார் தம்மேல், வெம்மைக் கூற்றம் முடுகாதே.
7
உரை
   
2109. அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்
கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப்
பரக்கும், புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல்,
பெருக்கும், இன்பம்; துன்பம் ஆன பிணி போமே.
8
உரை
   
2110. மாண் ஆய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரி ஆய் நிமிர்ந்தான், கலிக் காழிப்
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்து ஏத்தி,
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை, குற்றமே.
9
உரை
   
2111. அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர்,
கஞ்சி காலை உண்பார்க்கு, அரியான்; கலிக் காழித்
தஞ்சம் ஆய தலைவன்; தன்னை நினைவார்கள்,
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே.
10
உரை
   
2112. ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,
தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.
11
உரை