2.102 திருச்சிரபுரம் - நட்டராகம்
 
2572. அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம்
                                                      பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம்
                                                             தாம்
பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர்
                                                              ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர்
                                 வினையொடும் பொருந்தாரே.
1
உரை
   
2573. கோல மா கரி உரித்தவர்; அரவொடும், ஏனக்கொம்பு, இள
                                                         ஆமை,
சாலப் பூண்டு, தண்மதி அது சூடிய சங்கரனார்; தம்மைப்
போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர்; பொருகடல்
                                                    விடம் உண்ட
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார்; சிரபுரம் தொழ, வினை
                                                       நில்லாவே.
2
உரை
   
2574. மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட
                                                   மதித்து, அன்று,
கானத்தே திரி வேடனாய், அமர் செயக் கண்டு,
                                                அருள்புரிந்தார் பூந்
தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து
                                                     உறை எங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை, குற்றங்கள்,
                                                        குறுகாவே.
3
உரை
   
2575. மாணிதன் உயிர் மதித்து உண வந்த அக் காலனை உதை
                                                         செய்தார்,
பேணி உள்கும் மெய் அடியவர் பெருந் துயர்ப் பிணக்கு
                                           அறுத்து அருள் செய்வார்,
வேணி வெண்பிறை உடையவர், வியன்புகழ்ச் சிரபுரத்து
                                                       அமர்கின்ற
ஆணிப்பொன்னினை, அடி தொழும் அடியவர்க்கு
                                            அருவினை அடையாவே.
4
உரை
   
2576. பாரும், நீரொடு, பல்கதிர் இரவியும், பனிமதி, ஆகாசம்,
ஓரும் வாயுவும், ஒண்கனல், வேள்வியில் தலைவனும் ஆய்
                                                         நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல்
                                                      கோட்டாறு
வாரும் தண்புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர்
                                                      வருந்தாரே.
5
உரை
   
2577. ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ் உலகங்கள்
                                                      அவை மூட,
"ஆழி, எந்தை!" என்று அமரர்கள் சரண்புக, அந்தரத்து
                                                  உயர்ந்தார் தாம்,
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன்,
                                                  எம்பெருமானார்,
வாழி மா நகர்ச்சிரபுரம் தொழுது எழ, வல்வினை
                                                     அடையாவே.
6
உரை
   
2578. பேய்கள் பாட, பல்பூதங்கள் துதிசெய, பிணம் இடு
                                                      சுடுகாட்டில்,
வேய் கொள் தோளிதான் வெள்கிட, மா நடம் ஆடும்
                                                  வித்தகனார்; ஒண்
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்
                                                           தாம்;
தாய்கள் ஆயினார், பல் உயிர்க்கும்; தமைத் தொழுமவர்
                                                         தளராரே.
7
உரை
   
2579. இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன் எழில் கொள்
                                            வெற்பு எடுத்து, அன்று,
கலங்கச் செய்தலும், கண்டு, தம் கழல் அடி நெரிய வைத்து,
                                                 அருள் செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல் மன்று அதன்
                                            இடைப் புகுந்து ஆரும்,
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ, வினை
                                                       குறுகாவே.
8
உரை
   
2580. வண்டு சென்று அணை மலர்மிசை நான்முகன், மாயன்,
                                               என்று இவர் அன்று
கண்டு கொள்ள, ஓர் ஏனமோடு அன்னம் ஆய், கிளறியும்
                                                    பறந்தும், தாம்
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி; பரமேட்டி;
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுது எழ, வினை அவை
                                                        கூடாவே.
9
உரை
   
2581. பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும், பார்மிசைத்
                                                   துவர் தோய்ந்த
செறித்த சீவரத் தேரரும், தேர்கிலாத் தேவர்கள்
                                                     பெருமானார்
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட, இள
                                                         வாளை
வெறித்துப் பாய் வயல் சிரபுரம் தொழ, வினை விட்டிடும்,
                                                    மிகத் தானே.
10
உரை
   
2582. பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை, பை அரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை, நித்திலப்
                                                  பெருந்தொத்தை,
விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை, விண்ணவர்
                                                     பெருமானை,
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.
11
உரை