2.115 திருப்புகலூர் - செவ்வழி
 
2714. வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்) வெறி விரவு
                                                           நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே.
1
உரை
   
2715. வாழ்ந்த நாளும்(ம்), இனி வாழும் நாளும்(ம்), இவை
                                                      அறிதிரேல்,
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதி(ல்) இகாள
போழ்ந்த திங்கள் புரிசடையினான் தன் புகலூரையே
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள்! உங்கள் துயர் தீருமே.
2
உரை
   
2716. மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்) மலர்த்தாமரை,
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்தனுள்
தொடை கொள் கொன்றை புனைந்தான், ஒர் பாகம்,
                                                     மதிசூடியை
அடைய வல்லார் அமருலகம் ஆளப்பெறுவார்களே
3
உரை
   
2717. பூவும் நீரும் பலியும் சுமந்து, புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார்; செவித்துளைகளால்
யாவும் கேளார், அவன் பெருமை அல்லால்,
                                                அடியார்கள்தாம்,
"ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள்" என்று உளம்
                                                   கொள்ளவே.
4
உரை
   
2718. அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி நடையவாய்,
பொன் அம்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம் மூன்றுமதில் எரித்த மூர்த்தி திறம் கருதுங்கால்,
இன்னர் என்னப் பெரிது அரியர்; ஏத்தச் சிறிது எளியரே.
5
உரை
   
2719. குலவர் ஆக; குலம் இலரும் ஆக; குணம் புகழுங்கால்,
உலகில் நல்ல கதி பெறுவரேனும், மலர் ஊறு தேன்
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்தனுள்,
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே
6
உரை
   
2720. ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்), அரவு ஆரமாப்
பூணுமேனும், புகலூர்தனக்கு ஓர் பொருள் ஆயினான்;
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு, உடைகோவணம்
பேணுமேனும், பிரான் என்பரால், எம்பெருமானையே.
7
உரை
   
2721. உய்ய வேண்டில்(ல்) எழு, போத! நெஞ்சே! உயர்
                                                 இலங்கைக் கோன்
கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஒர்விரலினால்
செய்கை தோன்றச் சிதைத்து அருள வல்ல சிவன் மேய,
                                                            பூம்
பொய்கை சூழ்ந்த, புகலூர் புகழ, பொருள் ஆகுமே.
8
உரை
   
2722. `நேமியானும், முகம் நான்கு உடைய(ந்) நெறி அண்ணலும்,
"ஆம் இது" என்று தகைந்து ஏத்தப் போய், ஆர் அழல்
                                                       ஆயினான்;
சாமிதாதை; சரண் ஆகும்' என்று, தலைசாய்மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே!
9
உரை
   
2723. வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும்,
போர்த்த கூறைப் போதி நீழலாரும், புகலூர்தனுள்
தீர்த்தம் எல்லாம் சடைக் கரந்த தேவன் திறம் கருதுங்கால்
ஓர்த்து, மெய் என்று உணராது, பாதம் தொழுது உய்ம்மினே!
10
உரை
   
2724. புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல்பொடிப் பூச வல்ல விடை ஊர்தியை,
அந்தம் இல்லா அனல் ஆடலானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.
11
உரை