3410. கமையொடு நின்றசீரான் கழ லுஞ்சிலம்
       புமொலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான் விரி கொன்றையுஞ்
     சோமனையும்
அமையொடு நீண்டதிண்டோ ளழ காயபொற்      றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றா னுறை யும்மிட
     மொற்றியூரே.                       6

     6. பொ-ரை: பொறுமையுடன் விளங்கும் தலைவனான
சிவபெருமான், தன் திருவடிகளிலுள்ள கழலும், சிலம்பும் ஒலிக்கச்
சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும், சந்திரனையும் தாங்கிய,
நீண்ட வலிமையான தோளழகு உடையவன். காதில் பொன்னாலாகிய
தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: கமை - பொறுமை. கழலும் சிலம்பும் ஒலிப்ப என்றது
- உமையொரு கூறன் என்பது உணர்த்தியது. சுமையொடு -
சுமையாக. ஒடு - இசைநிறை. அமையொடு - அழகின் அமைதியோடு,
நீண்ட திண்ணிய தோளின் மீது, பொன்மயமான காதணி, இலங்க -
பிரகாசிக்க.