3541. மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொரு
       மதகரியை மழைபொலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன்
     மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புன லருவிபல சுனைகள்வழி
     யிழியவய னிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை
     சிந்துகா ளத்திமலையே.              5

     5. பொ-ரை: மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த
மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற, அதனைக்
கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக்
கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, அலைகளையுடைய
நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து, பல சுனைகளின் வழியாக
வயல்களில் பாய, அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற
ஒலியுடன், கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும்.

     கு-ரை: மலையின் மிசைதனின் - மலையின் மேல் இடத்தில்,
முகில்போல் வருவது ஒரு மதகரி - முகில்போல் வந்த ஓர்
மதங்கொண்ட யானை, மழைபோல் அலற - இடியைப்
போல்பிளிறும்படி, (கொலை செய்து உரிபோர்த்த சிவன்.)
அலைகொள் - அலைகளையுடைய, புனல் அருவி பல - நீரை
யுடைய அருவிகள், பல சுனைகள் வழி - பல சுனைகளிடத்தில்.
இழிய - பாய, அயல் - அருகிலே, நிலவும் - பொருந்திய,
முதுவேய் - முதிய மூங்கில்கள், ஒளிகொள் - பிரகாசிக்கின்ற, கதிர்
-கிரணங்களையுடைய, முத்தம் அவை - முத்துக்களை, கலகலவென
(அருவியின் வெள் ஒளிக்கு எங்கள் ஒளி தோற்றனவா என்று
சொரிவது போல்) சிந்து - சொரிகின்ற (காளத்தி மலை),