3543. ஆருமெதி ராதவலி யாகிய
       சலந்தரனை யாழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவ
     னிருந்தமலை தன்னைவினவில்
ஊருமர வம்மொளிகொண் மாமணி
     யுமிழ்ந்தவை யுலாவிவரலால்
காரிருள் கடிந்துகன கம்மென
     விளங்குகா ளத்திமலையே.         7

     7. பொ-ரை: தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும்
வாராத, வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச்
சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்து சிவபெருமான்
வீற்றிருந்தருளும் மலை, ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த
இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று,
பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும்.

     கு-ரை: ஆரும் எதிராத - எவரும் தன்னோடு சண்டைக்கு
எதிராத, வலியாகிய - வலிமை பொருந்திய (சலந்தராசுரனை) ஆழி
அதனால் -சக்கரத்தினால், ஈரும் வகைசெய்து - அவன்தலையை
அறுக்கும்படி செய்து, தேவர்களுக்கு அருள் புரிந்தவன் ஊரும்
அரவம் - ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள்; உமிழ்ந்தவை -
உமிழ்ந்தவைகளாகிய, ஒளி கொள் மாமணி -ஒளியைக் கொண்ட
சிறந்த இரத்தினங்கள், உலவி வரலால் - ஒளி உலாவி வருதலினால்,
கார் இருள் கடிந்து - கரிய இருளை ஓட்டி, கனகம் என -பொன்மலையைப் போல, விளங்கு - விளங்குகின்ற, காளத்திமலை.