3618. |
கத்திரிகை
துத்திரி கறங்குதுடி |
|
தக்கையொ
டிடக்கைபடகம்
எத்தணை யுலப்பில்கரு வித்திர
ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு
வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண்
மிடைந்துகளும் வேதவனமே. 5 |
5.
பொ-ரை: கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை,
தக்கை, படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள்
துதிக்க, தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய
பத்தர்களும், சித்து வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத்
துள்ளிக்குதிக்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கத்திரிகை துத்திரி இவ்வாத்தியங்களுடனே. கறங்கு
துடி - ஒலிக்கும் உடுக்கையும். தக்கை - தக்கை என்னும்
வாத்தியத்தோடு. இடக்கை படகம் என்னும் இவற்றோடு. உலப்பு இல்
- அளவற்ற. எத்தனை கருவித்திரள் - எவ்வகைப்பட்ட இசைக்
கருவிகளின் கூட்டங்கள். அலம்ப - ஆரவாரிக்க. இமையோர்கள் -
தேவர்கள். பரச - துதிக்க. ஒத்து - தாள ஒத்துக்கிணங்க. அற -
நன்றாக. மிதித்து - தாளையூன்றி. நடம் இட்ட - நடனமாடிய.
ஒருவர்க்கு - சிவபெருமானுக்கு (இடம் அது என்பர்). மெய்த்தகைய
- உண்மைத் தன்மையையுடைய. பக்தர்கள் - பத்தர்களும்.
சித்தர்கள் - சித்து வல்லவர்களும். மிடைந்து - நெருங்கி. உகளும்
- மகிழ்ச்சி மீக்கூரும். (வேதவனமே;) உகளுதல் - துள்ளிக் குதித்தல்;
- அது மகிழ்ச்சிமீக்கூர நிகழ்வதாற் காரணம் காரியமாக
உபசரிக்கப்பட்டது.
|