3648. |
முறைத்திறமு
றப்பொருடெரிந்துமுனி |
|
வர்க்கருளி
யாலநிழல்வாய்
மறைத்திற மறத்தொகுதி கண்டுசம
யங்களைவ குத்தவனிடம்
துறைத்துறை மிகுத்தருவி தூமலர்
சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு
சாரன்மலி கோகரணமே. 3 |
3.
பொ-ரை: கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும்
சிவபெருமான் முறையோடு உபதேசித்தார். வேதத்தின் பொருளாகிய
சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச்
சமயங்களை வகுத்தவர் சிவபெருமான். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான
மலர்களைச் சுமந்து கொண்டு, மூங்கில்களைத் தள்ளி, மதகுகளைச்
சிதைத்து, யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம்
என்னும் தலமாகும்.
கு-ரை:
ஆலம் நிழல்வாய் - கல்லாலின் நிழலில். முறைத்
திறம் - உபதேசிக்கும் முறையின் வகைப்படி. பொருள் தெரிந்து -
பக்குவநிலையை அறிந்து. முனிவர்க்கு - முனிவர்களுக்கு. அருளி -
அருள் கூர்ந்து. மறைத்திறம் அறத்தொகுதி - வேதத்தின்
பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப்பொருள்களையும். கண்டு
உபதேசித்துச் சமயங்களை வகுத்தவன் இடம் - உண்டாக்கியவரான
சிவபெருமானது இடமாம். துறைத்துறை - ஒவ்வொரு துறைகளிலும்,
அருவிநீர். தூமலர் - தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு.
வரையுந்தி - மூங்கில்களைத் தள்ளி. மதகைக் குறைத்து -
மதகுகளைச் சிதைத்து. கரி அறையிட - யானை பிளிற. புரிந்து -
செய்து. இடறு - மோதும் படியான. சாரல் - சாரலையுடைய
கோகரணம்.
|