3939. தண்டொடு சூலந் தழையவேந்தித்
       தையலொருபாகம்
கண்டிடு பெய்பலி பேணிநாணார்
     கரியி னுரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட
     வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற
     தொடர்பைத் தொடர்வோமே.           6

     6. பொ-ரை: சிவபெருமான் தண்டு, சூலம் இவற்றை ஒளிமிக
ஏந்தியுள்ளவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர்.
இடப்படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர்.
யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். வண்டுகள்
மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். அப்பெருமான்
திருத்தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து,
நாமும் அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக!

     கு-ரை: தழைய - ஒளிமிக. ஒருபாகம் கண்டு - ஒருபால்
குடிகொண்டு. இடுதல் - போடுதல். பெய்தல் - வார்த்தல்; எனவே
இட்டும், வார்த்தும் ஈயும் பிச்சை என்பது இடுபெய்பலி என்பதன்
பொருளாகக் கொள்க. தொண்டு - தொண்டர். தொடர்பைத்
தொடர்வோம் - பின்பற்றுவோம்.