4086. கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
       கரமுரஞ் சிரநெரிந் தலற
அடுத்ததோர் விரலா லஞ்செழுத் துரைக்க
     வருளினன் றடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
     பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        8

  8. பொ-ரை: கோபமுடைய, வாளேந்தியுள்ள அரக்கனான
இராவணன் முன்பு கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, அவன்
கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை
ஊன்றியவர் சிவபெருமான். பின் இராவணன் தன் தவறுணர்ந்து
அஞ்செழுத்தை யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக்
கொடுத்தருளினார். அத்தியயனம் செய்த நான்மறைகளைக்
கற்றுணர்ந்த வேதியர்கள் ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓத,
அருகிருந்து கேட்ட பசுக் கூட்டங்களும் அவற்றைக் கேட்கத் தம்
செவிகளைப் பழக்கும், விரிந்த சோலைகளையுடைய திருவீழிமிழலை
என்னும் திருத்தலமாகும். அங்கு வீற்றிருந் தருளும் இறைவனின்
திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும். விடைக்குலம் - வேதம்
பயிலும் சிறுவர் குழாமுமாம்.

     கு-ரை: கடுத்த - சினத்த. இராவணன் திருவைந்தெழுத்தை
ஓதி, சிவனுக்கு இழைத்த பிழையினின்றும் தப்பினன் என்பது
இரண்டாமடியில் குறித்த பொருள். இதனைப் “பண்டை இராவணன்
பாடி உய்ந்தனன்” என மேல் வந்தமை காண்க. (தி.3.ப.22.பா.8.)