4134. வளங்கிளர் கங்கை மடவர லோடு
  களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.      4

     4. பொ-ரை: குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த
திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, இளம்பிறைச்சந்திரனை அணிந்த
சடையையுடைய எம் பெருமானே! வளங்களைப் பெருக்குகின்ற
கங்கையாளொடு சுடுகாட்டு அரங்கமே இடமாகக் கொண்டு
ஆடுகின்றீர்.

     கு-ரை: வளம் கிளர் கங்கை - பாய்தலால் வளங்கள்
அதிகரித்தற்குக் காரணமாகிய கங்கை. அரங்கு ஆக - காடு அரங்கு
களம் ஆகப் பட ஆடுதிர் எனக்கூட்டிச் சுடுகாடு அரங்கினிடமாகக்
கொண்டு ஆடுதிர் எனப் பொருள் கூறுக.