2849. பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
  மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
     நுந்தம் மேல்வினையோட வீடுசெய்
     எந்தை யாயஎம் மீசன் தானே.          5

     5. பொ-ரை: எலும்பு மாலைகளைத் தன் திருமேனியில்
அணிந்து திருப்பூந்தராய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
சிவபெருமானை, நிறைந்த உள்ளத்தோடு வணங்கிட, நம்
அனைவர்க்கும் தந்தையாகிய அவ்விறைவன், நீங்கள் முன்பு ஈட்டிய
சஞ்சிதவினையைப் போக்குதலோடு, இனிமேல் வரும் ஆகாமிய
வினையும் ஏறாதபடி செய்து வீடுபேறு அருளுவான். தத்தம் கால
எல்லைகளில் நீங்கிய திருமால், பிரமன் இவர்களின் எலும்புகளைச்
சிவபெருமான் மாலையாக அணிந்துள்ளது சிவனின் அநாதி
நித்தத்தன்மையையும், யாவருக்கும் முதல்வனாம் தன்மையையும்
உணர்த்தும்.

     கு-ரை: புந்தி - மனம். மலிந்த புந்தியராதல் - உளன்
பெருங்களன் செய்தல். நுந்தம் - உங்கள். மேல் - காலப்பொருளில்,
முற்பிறப்புகளில் ஈட்டிய எஞ்சிய சஞ்சித வினையையும்;
இடப்பொருளில், இனி ஈட்டும் வினையாகிய ஆகாமிய வினையையும்
குறிக்கும். வினையோட வீடுசெய் எந்தை.....ஈசன்தானே - சிவ
பெருமான் ஒருவனே நமக்கு உற்ற துணையாவன் என அவாய்நிலை
வருவிக்க.