2878. சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி
       கோவண
உடையுடை யானுமை யார்ந்த வொண்கண்
     உமைகேள்வனும்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட
     வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர
     னல்லனே.                           1

     1. பொ-ரை: சடை முடியுடையவனும், பசுவிலிருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும்,
சரிந்த கோவண ஆடையுடையவனும், மை தீட்டிய ஒளி பொருந்திய
கண்ணை யுடைய உமாதேவியின் கணவனும், வாயில்களையுடைய
நெடிதோங்கிய நல்ல மாடங்களை உடைய திருக்கடவூரில்
இடபவாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன்
அல்லனோ?

     கு-ரை: சடையையுடையவன். மை ஆர்ந்த ஒண்கண்
உமைகேள்வன்-மைதீட்டிய கண்களையுடைய உமை கணவனும்,
கடை-வாயில். கடவூரில் விடையுடையவனும் வீரட்டானத்
தானல்லனோ? வீர+அட்ட+தானம்=வீரட்டானம், மருஉ. சிவபெருமான்
வீரத்தைக் காட்டிய எட்டு இடம்- அவை “பூமன் சிரங்கண்டியந்தகன்
கோவல் புரமதிகை” என்னும் பாடலால் அறிக. வீரஸ்தாநம்
எனலுமாம்.