2884. செவ்வழ லாய்நில மாகிநின் றசிவ
       மூர்த்தியும்
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி
     கேள்வனும்
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட
     வூர்தனுள்
வெவ்வழல் ஏந்துகை வீரட்டா னத்தர
     னல்லனே.                            7

     7. பொ-ரை: செந்நிற நெருப்பாகவும், நிலமாகவும் விளங்கும்
சிவமூர்த்தியும், ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்ற
மூவகை நெருப்பாய்த் திகழ்பவனும், இருக்கு, யசுர், சாமம்,
அதர்வணம் என நான்கு வேதங்களாய் விளங்குபவனும்,
ஞானநூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல்
என்ற ஞானவேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய்
விளங்குபவனும், கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக்
கக்குகின்ற வாயையுடைய சினமிகுந்த பாம்பை அணிந்தவனும்,
வெப்ப முடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும், திருக்
கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ?

     கு-ரை:சிவமூர்த்தி-மங்களகரமான திருவுருவுடையவன்.
முத்தழல், ஆகவனீயம்; காருபத்தியம்; தட்சிணாக்கினியென்பன.
ஐந்தும் ஆய-ஐவகை வேள்வியுமாகிய. “ஐவகை வேள்வியமைத்து”
என வருவது காண்க.(திருவெழுகூற்றிருக்கை.)
முனிகேள்வன்-முனிவரிடத்து நண்பு பூண்டவன். கேள்வன்-நண்பன்.
கேண்மையென்னம் பண்படியாகப் பிறந்தபெயர்.