2895. |
சேடர்விண்
ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர் |
|
வீடர்முத்
தீயர்நால் வேதத்தர் வீழி மிழலையார்
காடரங் காவுமை காணவண் டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே. 7 |
7. பொ-ரை:
திருவீமிழலையில் வீற்றிருக்கும் இறைவர்
விண்ணோர்கட்குத் தூரமானவர். மேன்மை வாய்ந்த வேதாங்க
நூல்கள் ஆறினையும் கற்று வல்லவர்களாய், மூவகை அழலை
ஓம்பி, நால் வேதங்களையும் பயின்ற அந்தணர்கட்கு அணியராகி
வீட்டின்பம் நல்குபவர். சுடுகாட்டை அரங்காகக் கொண்டு,
உமாதேவியார் கண்டு மகிழ, எல்லா அண்டங்களிலுமுள்ள தேவர்கள்
தொழத் திருநடனம் செய்பவராகிய சிவபெருமானை ஏத்தி
வழிபடுபவர்களின் வினையாவும் அழியும்.
கு-ரை:சேடர்
விண்ணோர்கட்கு-தேவர்களுக்குத் தூரமானவர்.
தேவர்கள் பூசுரர்களாய் ஆறு சாத்திரங்களும் கற்றவர்களாய்
முத்தியில் இச்சையவர்களாய் மூவகை அழலை ஓம்பி, நால்
வேதங்களையும் பயின்றவர்களாகிய அந்தணர்கட்கு அணியராய்த்
திருவீழிமிழலையுள் எழுந்தருளியுள்ள, நாடகம் ஆடியை-நடனம்
செய்பவராகிய சிவபெருமானைத் துதிக்க வினை நசிக்கும்.
விண்ணாடர்கட்குச் சேடர் எனவே திருவீழிமிழலையுடையார்க்கு
அணியர் என்பது சொல்லாற்றலாற் பெறவைத்தார்.
|