2903. உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
  வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்
தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே. 4

     4. பொ-ரை: மிகுந்த காமவேட்கையால் பிறன்மனைவியைக்
கவர்தல் தவறு என்ற அறவுரையை உணராத, இராவணனின் மலை
போன்ற தோள்களைத் தொலைத்த இராமன் மகிழ்ந்து போற்றிய,
புலவு நாறும் கடற்கரையையுடைய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும்
இறைவன் அரையில் பாம்மை கச்சாகக் கட்டித் திருநடனம் புரியும்
தலைவனான சிவபெருமான் அல்லனோ?

     கு-ரை: உரை-சாபம். சாபம் தனக்கு நேர்ந்ததை உணராதவன்,
மிக்க காம வேட்கையான். உறு-மிக்க. மலையைப் பொருவும் தோள்.
பொருதோள் வினைத்தொகை. இற-சிதைய. செற்ற-அழித்த.
வில்லி-இராமன். இகரம் ஆண்பாலில் வந்தது. விரை மருவும் கடல் -
புலவு நாறுங்கடலை இங்ஙனம் கூறியது. இறைவனைத் தொழ உவந்து
நீராடிய அரம்பை மாதர் முதலியோரது மெய்ப்பூசல் என்க. ஒதம் -
அலை. அரை - இடுப்பின் கண்ணே. அரை - ஆகுபெயர். நல்லன் -
நல்லவன், சிவபிரானுக்கு உரிய பெயர். “நல்லானை நான்
மறையோடாறங்கம் வல்லானை”.