2939. மாசின வரக்கனை வரையின் வாட்டிய
  காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.       8

     8. பொ-ரை: சிவபெருமான் குற்றம் செய்த அரக்கனான
இராவணனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்தவர். கோபத்தால்
பிற  உயிர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று
கோட்டைகளை எரித்த நீலகண்டர். அந்தணர்கள் நிறைந்து
விளங்குகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில்,
வீற்றிருந்தருளும் அவர் காயாம்பூவைப் போன்ற கருநிறக்
கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார். அவரைத்
தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள்.

     கு-ரை: மாசு இன் + அ அரக்கனை வரையின்
வாட்டிய-பாவத்தையுடைய பாவியாகிய இராவணனைக் கயிலை
மலையின்கீழ் வாடச்செய்த, காய்ச்சின-துன்புறுத்தும் கோபத்தை
யுடைய. கறுத்த-கோபித்த. கண்டனார்-கண்டத்தையுடையவர். அரசன்
குற்றத்தைக் கண்டித்தான் என்றதில் வரும் கண்டித்தல் என்பது
போல, காசை-காயாம்பூ. செய்-உவமவாசகம். மாசின-பெயரடியாகப்
பிறந்த குறிப்புப் பெயரெச்சம். அடுத்த அடியிற் காய்சினம் என
வருதலால் முதலடியிலும் சினம் என்று பிரித்தல் சிறப்புடைத்தன்று.
வரையின்-இன் ஏழுனுருபில் வந்தது.