2965. நிணம்படு சுடலையி னீறு பூசிநின்
  றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும்
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.      1

     1. பொ-ரை: பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப்
பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர், உலர்ந்த
பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பர். ஆயினும்
அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: சுடலையில் எழும்பிய நீறு பூசிப் பேய்களோடு
இணங்குவர். அங்குப் பெரிய கூத்து ஆடுவர். உலர்ந்த
மண்டையோட்டில் உண்பர். ஆயின் அவரிடத்தில் என்ன குணம்
உளதாவது என்னற்க; உயர்ந்த குணம் எல்லாம் உடையர் என்க
“கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை தாயுமிலி
தந்தையிலி தான் தனியன் காணேடி ... காயின் உலகனைத்தும்
கற்பொடி காண் சாழலோ.”