3020. நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
  நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே.     1

     1. பொ-ரை: நான் விழித்திருக்கும் பொழுதும், கனவு
காணும்பொழுதும், உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும்
எனக்குக் காட்சி தரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய
இறைவனாய், ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும்
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற,
நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான
சிவபெருமானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக.

     கு-ரை: நான் விழித்திருக்கும்பொழுதும், கனாக் காணும்
பொழுதும் எந்நாளும் தன்னுடைய ஞான ஒளி வடிவு நினைவிலும்
(வாக்கிலும்) எனக்குவந்து எய்தும் நின்மலன் என்பது
முதலிரண்டடிகளின் கருத்து. நினைவிலும் என்ற எச்சவும்மையால்,
வாக்கிலும் என்பது வருவித்துக் கொண்டது. எரி ஆடும் -
நெருப்பில் ஆடும்.