3065. மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன
  வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.     3

     3. பொ-ரை: தேன் மணமும், வண்டுகள் இன்னிசையும்
விளங்கும் திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும், பசுவிலிருந்து
பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும்
சிவபெருமானின் சிவவேடங்கள், மன்னுயிர்களின் பெருமையை
மேம்படச் செய்வன. வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான
மாசினை நீக்குவன. முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன.

     கு-ரை: மாசு நீக்குவன - மனத்துக்கண் மாசை நீக்குவன.
வான் - வெளி -இன்பவெளி. உள்க - நினைக்க. ஆன் அஞ்சு -
பஞ்சகவ்வியம்; அபிக்ஷேகத்திரவியங்களில் ஒன்று. "ஆனைந்தும்
ஆடினான்காண்" என்பது அப்பர் திருவாக்கு.