3083. உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
  பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர்இளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.     10

     10. பொ-ரை: உறியினிடத்துச் சுரைக்குடுக்கை, கமண்டலம்
இவற்றைத் தாங்கிக் கையில் பிடித்து அலையும், இறைவனை
உணராத பாவிகளாகிய சமணர், புத்தர்கள் முறையே செய்யும்
தலையிலுள்ள முடிகளைப் பறித்தலும், காவியாடை போர்த்தலும்
ஆகிய செயல்களால் பயனில்லை. மடமையுடைய பெண்யானையும்
வளர்கின்ற இளங்கொழுங்கொடியும் போன்ற உமாதேவியை
ஒருபாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும்
திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழுவது
நம் கடமையாகும்.

     கு-ரை: உறித்தலை - உறியினிடத்து. சுரை - சுரைக்குடுக்கை.
ஓர் பாத்திரமும் ஆம். குண்டிகை பிடித்த - கமண்டலத்தையும்
தாங்கி, உச்சி - தலையில். மயிர் பறித்தலும். போர்த்துதலும், மயிரை
வளர்த்தலும் ஆகிய இவற்றால் பயனில்லை. கறித்து - கடித்து.