3085. படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
  உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.     1

     1. பொ-ரை: சிவபெருமான் வெண்ணிற மழுவைப்
படைக்கலனாக உடையவர். பாயும் புலித்தோலை அரையில்
ஆடையாக அணிந்தவர். உமாதேவியைத் தம் திருமேனியில்
ஒரு கூறாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாகக் கொண்டவர்.
திருவெண்ணீற்றைப் பூசியவர். கங்கையைச் சடையிலே தாங்கியவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும்
கோயிலாகும்.

     கு-ரை: படையினார் வெண்மழு-வெண்மையாகிய மழுவைப்
படையாக உடையவர்.