3196. செய்யன்வெள்ளிய னொள்ளியார்சில
       ரென்றுமேத்தி நினைந்திட
ஐயனாண்டகை யந்தணனரு
     மாமறைப்பொரு ளாயினான்
பெய்யுமாமழை யானவன்பிர
     மாபுரமிடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்
     தேத்துமின்வினை வீடவே.            7

     7. பொ-ரை: இறைவன் சிவந்த திருமேனியுடையவன்.
வெள்ளிமலை எனப்படும் கயிலைக்கு நாயகன். சிவஞானம் பெற்ற
பெருமக்களால் எக்காலத்திலும் போற்றப்பட்டு வணங்கப்படும்
தலைவன். அளவில்லா ஆற்றலும், எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும்
உடையவன். அரிய நான்மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன்.
பெய்யும் மழைபோன்றவன். திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும்
மழுப்படையேந்திய சிவபெருமானை உங்கள் வினைகள் நீங்க
வழிபடுவீர்களாக!

     கு-ரை: பெய்யும் மாமழை ஆனவன். வெண்மழு முன்னும்
வந்தது. வினைவீட - வினை ஒழிய.