3260. பெண்ணொர் கூறினர் பேயுட னாடுவர்
  பண்ணு மேத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாய வடிகள் சரிதையே.             6

     6. பொ-ரை: சிவபெருமான் உமாதேவியைத் தம்
திருமேனியில் ஒரு பாகமாக உடையவர். பேய்க்கணங்கள் சூழ
ஆடுபவர். உலகத்தார் போற்றும்படி நல்ல பண்களை
ஏழிசைகளோடு பாடிய வேடத்தர், மூன்று கண்களை உடையவர்.
இவை கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளும் தலைவரான
சிவபெருமானின் புகழை உணர்த்துபவைகள் ஆகும்.

     கு-ரை: ஏத்து - உலகத்தார் போற்றத்தக்க இசையும்
ஏழிசையும், பண்ணும் - உருக்(சாகித்தியம்)களையும், பாடிய
வேடத்தார். சரிதை - இங்குப் புகழ் என்ற பொருளில் வந்தது,
இவை அண்ணலாகிய அடிகள் புகழ்களேயாகும்.