3272. மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
  எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியொ டுற்றமுக்
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.       7

     7. பொ-ரை: மண்ணுலகில் பொருந்திய மிக்க
செல்வங்களையும், வானுலகில் மறுமையில் பெறக்கூடிய
செல்வத்தையும் தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி,
தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக்
கொண்டுள்ளவனும், பிறைச் சந்திரனைச் சடைமுடியில் அணிந்த
வனும், முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருக்கழிப்பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக!

     கு-ரை: மண்ணில் - பூமியில். ஆர் பொருந்திய. மலி - மிக்க.
செல்வமும் வானமும் - வானத்திற் பொருந்திய மிக்க செல்வமும்.
எண்ணி (அழியாத இன்பம் தாரா என்பதையும்) தெளிந்து. இனிது -
நன்கு (ஏத்துமின்) கழிப்பாலை - கழிப்பாலையைத் துதியுங்கள்.
பேரின்பத்தைத் தரத்தக்கவன் சிவனே என்பதையும். பிறை
நெற்றியோடு உள்ள - நெற்றியினருகே (சடாபாரத்தில்) பிறைமதி
பொருந்திய.