3354. கோலமாய நீண்மதிற் கூடலால வாயிலாய்
  பாலனாய தொண்டு செய்து பண்டுமின்று முன்னையே
நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.     5

     5. பொ-ரை: அழகிய நீண்ட மதில்களையுடைய கூடலில்
விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருமானே!
மார்க்கண்டேயர், சண்டேசுரர் போன்ற பாலர்கள் சிவபூசை செய்து
பண்டைக் காலத்தும், இக்காலத்தும் வழிபட விளங்கும்
நீலகண்டனே. தேவர்கள் உன்னையன்றிப் பிற தெய்வங்களைத்
தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர்.

     கு-ரை: பாலன் ஆய - சண்டேசுவர நாயனார் போன்ற.
தொண்டு செய்து - வழிபாடு புரிந்து. ஆலவாயிலாய் - நீலம் ஆய
கண்டனே. தேவர் நித்தலும் தொண்டு செய்து நின்னையே
தேர்வதன்றிப் பிற தெய்வங்களைச் (சீலமாய சிந்தையில்)
தேர்வதில்லை என முடிவுகொள்க.