3362. சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று
       சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவி
     லண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாத
     மேத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண
     வல்லரே.                          2

     2. பொ-ரை: சேறுடைய குளிர்ச்சி பொருந்திய வயல் வளம்
பெருகுமாறு, நெடுந்தொலைவு சென்று ஓடிவரும் காவிரி ஆற்றின்
துறையில் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும்
அண்ணலாகிய சிவபெருமான், திருவெண்ணீறு பூசிய
திருமேனியுடையவர். ஒப்பற்ற அப்பெருமானின் திருவடிகளைப்
போற்றுபவர்கள், சிந்தை முதலிய பசுகரணங்கள், பதி கரணங்களாக
மாறியவர்களாய், முத்தியின்பம் பெறுவதற்குரிய சிவஞானம் கைகூடப் பெற்றவர்கள் ஆவர்.

     கு-ரை: சேண் உலா - நெடுந்தூரத்திலிருந்து உலாவி
வருகின்ற; ஆறு. சென்று சென்று - பலதரமும் சென்று.

     சிந்தை முதலிய பசு கரணங்கள். பதிகரணங்களாக
மாறியவராய் விண்ணில் எண்ண வல்லர் - முத்தியின்புற்றோராய்க்
கருதத்தக்கவர்.