3448. தண்புன லும்மரவுஞ் சடை மேலுடை
       யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகா ரிறை வன்னுறை
     வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம்
     பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர் தம்வினை
     பற்றறுமே.                        11

     11. பொ-ரை: குளிர்ந்த கங்கையும், பாம்பும் சடைமுடியில்
அணிந்த அழகனான சிவபெருமான், உறையும் சந்திரனைத் தொடும்
படி ஓங்கி வளர்ந்துள்ள செழுமைவாய்ந்த சோலைகள் சூழ்ந்த
திருவக்கரை என்னும் திருத்தலத்தைப் போற்றி, சண்பை நகர்
எனப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான
தமிழ் ஞான சம்பந்தன், அருளிய பண்ணோடு கூடிய
இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினையிலிருந்து நீங்கப்
பெறுவர்.

     கு-ரை: பண்புனை பாடல் - பண்ணாற் புனைந்து பாடிய
பாடல்.