3508. |
நாவாய பிறைச்சென்னி |
|
நலந்திகழு
மிலங்கிப்பி
கோவாத நித்திலங்கள்
கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையா
லெயின்மூன்று மெரிசெய்த
தேவாதி தேவனார்
திருவேட்டக் குடியாரே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமான் தோணிபோன்ற வடிவுடைய
பிறைச்சந்திரனைச் சடையிலே தரித்தவர். அழகாய் விளங்கும்
சங்குப்பூச்சிகளையும், கோத்தற்குரிய துளையில்லாத
நல்முத்துக்களையும் கடலலைகள் கொணர்ந்து சேர்கின்ற குளிர்ந்த
கடற்கரைச் சோலைகளையுடைய திருவேட்டக்குடி என்னும்
திருத்தலத்தில் அக்கினியாகிய கணையினால் மேருமலையை
வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த தேவாதி தேவனான
அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
நாவாய - தோணியின் வடிவையுடைய (பிறை) என்றது
சடையில் கங்கையுண்மையால் பிறை அங்குத் தோணி போன்றது
என்று ஒரு குறிப்பு. நலம் திகழும் - அழகால் விளங்குகின்ற.
தேவாதி தேவனார் என்க. இலங்கு இப்பி - விளங்குகின்ற சங்குப்
பூச்சிகளையும். கோவாத - கோத்தற்குரிய துளையில்லாத.
நித்திலங்கள் - முத்துக்களையும், (கடல் திரைகள்) கொணர்ந்து
எறியும் - வீசுகின்ற குளிர் கானல் - குளிர்ந்த கடற்கரைச்
சோலையையுடைய திருவேட்டக்குடியாரென்க. ஏ ஆரும் - அம்பு
பொருந்திய. வெஞ்சிலையால் - கொடிய வில்லால். எயில் - மதில்.
நாவாய் - கப்பல், இங்குத் தோணி என்ற பொருளில் நின்றது.
|