3559. |
கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை |
|
கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவை சொன சொன்மகிழு
மீசனிடமாம்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை
தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும் வைகாவிலே. 1 |
1.
பொ-ரை: சிவனைத் தவிர வேறு பற்றுக்கோடில்லாத
ஏழையடியவர்கள், கோழை பொருந்திய கழுத்து உடையராயினும்,
பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும்,
தங்களால் இயன்ற இசையில், பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள்
எவையாய் இருந்தாலும், அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தென்னை மரத்தின்
முற்றிய காய்கள் கமுக மரத்தில் விழ, அதன் வரிசையான குலைகள்
சிதறி வாழைக்குலையில் விழ, அவ்வாழை மரங்களினின்றும்
உதிர்ந்து வீழ்கின்ற கனிகள் வயலில் ஊறி அதனைச் சேறாகச்
செய்யும் வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கோழை மிடறு ஆக - கோழைபொருந்திய கண்டம்
ஆயினும். கவிகோளும் இலவாக - பாடும் கவிகள் பொருள்
கொள்ளும்படி நிறுத்திப் பாடுதலும் இல்லனவாயினும், கூடும்
வகையால் இசை - இசை இயன்ற அளவில், (ஏழை அடியார்
அவர்கள்) யாவை சொன்னசொல் - தன்னை அன்பினால் பாடின
பாடல்கள் எவையாய் இருந்தாலும். மகிழும் - அவற்றிற்கு
மகிழ்கின்ற (ஈசன் இடமாம்) தாழை - தென்னைமரத்தின். இளநீர்
முதியகாய் - இளநீர்முற்றிய நெற்றுக்கள். கமுகில் - கமுகமரத்தில்
(வீழ) நிரைதாறுசிதறி - வரிசையான குலைகள் சிதறி
(வாழைக்குலையில் வீழ) வாழை - அவ்வாழைமரங்களினின்றும்.
உதிர்வீழ் - உதிர்ந்து வீழ்கின்ற கனிகள். வயல் ஊறி - வயலில்
ஊறி. சேறுசெய்யும் - அதனைச்சேறாகச் செய்கின்ற. திருவைகாவில்.
|