3565. |
நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் |
|
வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய்
சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி
நின்றதுதிர
வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல்
வைகாவிலே. 7 |
7.
பொ-ரை: நாள்தோறும் பக்தியோடு தோத்திரப் பாடல்கள்
பாடி, ஞானமலர்களான கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல்,
பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு இவை கொண்டு
தோள்களும், கைகளும் கூப்பித் தொழுபவர்கட்கு அருள் செய்கின்ற
சோதிவடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நீண்டு
வளர்ந்த சோலைகளிலுள்ள தென்னைகளிலிருந்து முற்றிய
நெற்றுக்கள் உதிர, அதனால் வாளைமீன்கள் துள்ளிப்பாய, அதனால்
தேன்மணக்கும் மலர்கள் விரிய வயல்கள் சூழ்ந்த திருவைகாவூர்
என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
நாளும் - நாடோறும். மிகுபாடலொடு - மிகுந்த
பாடலொடு. ஞானமிகும் - சிவஞானமிக்க. நல்லமலர் - நல்ல
மலர்களோடு. தோளினொடு கைகுளிர - தோளும் கையும் குளிரும்
படியாக. தொழுமவர்க்கு - வணங்குகின்றவர்களுக்கு. அருள்செய் -
அநுக்கிரகம் பண்ணுகின்ற. சோதி இடமாம் - ஒளிவடிவானவனது இடமாகும். நீளவளர்சோலை
தொறும் - உயரமாக வளர்ந்த
சோலைகள் தொறும். நாளிபல - தென்னை மரங்கள் பலவற்றில்.
நின்றது - நின்றதாகிய. துன்றுகனி - அடர்த்தியான நெற்றுக்கள்.
உதிர - உதிரும்படி, வாளை - வாளைமீன்கள். குதிகொள்ள -
துள்ளிப்பாய, (அதனால்) மதுநாற - தேன் மணக்கும்படி. மலர்
விரியும் - மலர்கள் விரிகின்ற, வயல் - வயல்கள் சூழ்ந்த,
வைகாவிலே.
|