3570. விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
       பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி
     நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
     திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
     தீவினைகள் தீருமுடனே.              1

     1. பொ - ரை: நன்றாக இஞ்சி விளையும் வயலில்
பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை
விளங்க, மேகத்தைத்தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த
மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான்.
நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும்
அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய
திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின்
திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள்
உடனே தீரும்.

     கு-ரை: விங்கு விளைகழனி - இஞ்சி விளையும் கழனியிலே,
மிகு கடைசியர்கள் - மிக்க பள்ளத்தியர்கள், பாடல் விளையாடல்
- பாடலும் விளையாடலுமாகிய, அரவம் - ஓசைகளையும்,
மங்குலொடு நீள்கொடிகள் - மேகமண்டலம் வரை நீண்ட
கொடிகளையுடைய. மலிமாடம் - நெருங்கிய மாடங்களையும்,
நீடுபொழில் - நெடிய சோலைகளையும் உடைய, மாகறல் உளான்
- திருமாகறலில் இருப்பவன். கொங்குவிரி - வாசனை விரி்கின்ற.
வளர்திங்கள் - வளரக்கூடிய பிறைச் சந்திரனையும். செங்கண்
விடை அண்ணல் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய
இடபத்தையுமுடைய. சிவபெருமானது அடிசேர்பவர்களும் -
திருவடியை இடைவிடாது நினைப்பவர்களுக்கு. தீவினைகள் -
கொடியவினைகள். தீரும் - நீங்கிவிடும். “பைங்கண்வெள்
ளேற்றண்ணல்” (திருநள்ளாறு) என்னாமல் செங்கண்
விடையென்றதனால் திருமாலாகிய விடையென்க.