3588. |
நேசமிகு தோள்வலவ னாகியிறை |
|
வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண
ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலி னண்ணலெளி
தாமமரர் விண்ணுலகமே. 8 |
8.
பொ-ரை: திக்குவிசயம் செய்வதில் விருப்பம் கொண்டு
வரும் இராவணன் தன் புய வலிமையினால் சிவபெருமான்
வீற்றிருக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, இழிபண்புடைய
இராவணனின் வலிமையை வாட்டியவராய், தன்னுடைய எல்லையும்,
தன்னுடைய நிலைமையும் பிறரால் அறியப்படாது, பிறைச்சந்திரனை
அணிந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருகின்ற திருப்பட்டீச்சரம்
என்னும் திருக்கோயிலைத் தொழுது வணங்குவார்களின் வினை
முழுவதும் நீங்க, இனிப் பிறந்திறத்தலும் நீங்க அவர்கள் சிவஞானம்
பெறுதலால் விண்ணுலகத்தை எளிதில் அடைவர்.
கு-ரை:
நேசம் மிகு - திக்குவிசயத்தில் விருப்பம் மிகுந்த.
தோள் வலவன் ஆகி - புயவலிமையுடையவனாய். இறைவன்
மலையை - சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கைலாய மலையை.
நீக்கியிடலும் - தூக்கி அப்பால் இட முயன்ற அளவில். நீசன்
விறல்வாட்டி - இழிதகவினனாகிய இராவணனது வலிமையை
வாட்டியவன். வரை - தன்னுடைய எல்லையையும். உற்றது -
தன்னுடைய நிலைமையையும். உணராத - பிறரால் அறியப்படாத.
நிரம்பா மதியினான் - நிரம்பாத (பிறைச்) சந்திரனை அணிந்தவன்
(ஆகிய). ஈசன் உறை - கடவுள் தங்கிய (பட்டீச்சரம் தொழுது
எழுவார்) வினை ஏது மிலவாய் - கன்மங்கள் முற்றும்
அழிந்தனவாகி, நாசம் (இனிப்பிறந்து) இறத்தல். அற - நீங்க.
வேண்டுதலின் - வேண்டிச்சிவஞானம் பெறுதலினாலே. அமரர்
விண்ணுலகம் - (அவர்களுக்குத்) தேவர் உலகம். எளிதாம் -
ஓர்பொருளன்று. நேசம் - இங்கு ஆசையை யுணர்த்திற்று.
|