3616. காரியன்மெல் லோதிநதி மாதைமுடி
       வார்சடையில்   வைத்துமலையார்
நாரியொரு பான்மகிழு நம்பருறை
     வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில
     மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழனன் மாதரிசை
     பாடலொலி வேதவனமே.               3

     3. பொ-ரை: மேகத்தையொத்த மெல்லிய கூந்தலையுடைய,
கங்காதேவியை நீண்ட சடைமுடியில் தாங்கி, மலைமகளைத் தன
திருமேனியின் பாதிப்பாகமாகக் கொண்டு சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற தலமாவது. நீண்ட மாடங்களையுடைய
வீதிகளில் தேர் ஓடும் திருவிழாக்களின் ஒலியும், திண்ணிய
சங்குகளின் ஒலியும், ஒளி பொருந்திய பேரி அல்லது தம்பட்டம்
என்னும் வாத்தியத்தின் ஒலியும், நாடோறும் ஒலிக்க, நறுமணம்
கமழும் தொங்கும் கூந்தலையுடைய பெண்கள் இசைக்கருவிகளோடு
பாடுகின்ற பாட்டினிசையும் ஒலிக்கின்ற திருவேதவனம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: கார் இயல் - மேகத்தையொத்த. மெல் ஓதி -
மெல்லிய கூந்தலையுடைய. நதிமாதை - கங்காதேவியை. முடி -
தலையில். வார்கடையில் - நீண்ட சடையின் மேல் (வைத்து)
மலையார் நாரி - இமயமலையிலுள்ளார் மகளாகிய அம்பிகையை.
ஒருபால் - ஒரு பாதியுடம்பில் (வைத்து). மகிழும் - மகிழ்கின்ற.
நம்பர் - சிவபெருமான். உறைவு - தங்கும் இடம் என்பர். நெடும்
மாடம் - நெடிய மாடங்களையுடைய. மறுகில் - வீதிகளில். தேர்
இயல் விழாவின் ஒலி - தேர் ஓடும் திருவிழாக்களில் ஒலிக்கும்.
திண்பணிலம் - திண்ணிய சங்கு. ஒண்படகம் - சிறந்த படகம்
என்னும் வாத்தியம் முதலியவற்றின் ஒலியோடு, நாளும் - நாடோறும்.
வேரிமலி - மணம் மிக்க. வார் குழல் - தொங்கும் கூந்தலையுடைய.
நல்மாதர் - உத்தமிகளாகிய பெண்கள். இசையால் - இசைக்
கருவிகளோடு. இசை பாடல் ஒலி - இசைபாட்டுப்

பாடுவதாலுண்டாகிய ஒலியும் (உடைய வேதவனம்). திருமறைக்
காட்டை (நம்பன் உறைவு என்பர்).