3682. பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமில
       ரென்றுலகு பேணிப்
பணியுமடி யார்களன பாவமற
     வின்னருள்ப யந்து
துணியுடைய தோலுமுடை கோவணமு
     நாகமுட றொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ
     தவளிவண லூரே.                     4

     4. பொ-ரை: பிணியும், இறப்பும், பிறப்பும் இல்லாதவர் என்று
உலகத்தவரால் போற்றப் படும் சிவபெருமான் தம்மை வணங்கும்
அடியவர்களின் பாவம் யாவும் நீங்குமாறு செய்து, இன்னருள்
புரிபவர். கிழிந்த தோலையும், கோவணத்தையும் ஆடையாக
உடுத்ததுடன், பாம்பை அழகிய ஆபரணமாக அணிந்து விளங்கும்
அவர் வீற்றிருந்தருளுவது திருஅவளிவண்ணலூர் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: பிணியும், இறப்பும் பிறப்பும் உடைய நமக்கு,
இவையில்லாதவனாகிய சிவபெருமான் தஞ்சமாவரென்று உலகத்தில்
பாராட்டி வணங்கும் அடியார்களின் (அவற்றிற்குக் காரணமான)
பாவம் நீங்க உடையவன் இனிய அருள்தந்து உறைவது
(அவளிவணல்லூர்) "எல்லார் பிறப்பும் இறப்புமியற் பாவலர்தஞ்
சொல்லால் அறிந்தோநம் சோமேசர்-இல்லிற் பிறந்தகதை
யுங்கேளேம் பேருலகி வேவாழ்ந் திறந்தகதை யுங்கேட் டிலேம்"
-சோமேசர் முதுமொழி வெண்பா. எனவும்,

"...மற்றத்தெய்வங்கள்
வேதனைப் படுமி றக்கும்
பிறக்கும்மேல் வினையும் செய்யும்"

(சித்தியார் சுபக்கம். சூத்.2.25)

எனவும் வரும் பாடல்கள் இங்கு அறியத்தகும்.

     இவற்றையுடைய பிறதேவர்களைப்பற்றிக் கரையேறுவோ
மென்பது "குருடும் குருடும் குருட்டாட்டமாடிக், குருடும் குருடும்
குழிவீழ்ந்தவாறே" என்றபடியேயாம் என்க. பயந்து - பயன்
பெறத்தந்து, துணியும் - கிழித்தலையுடைய. தோலும், கோவணமும்,
உடையும், பாம்பு உடலில் தொங்க அணியும் ஆபரணமும் ஆக
(அவைதனக்கு அழகு செய்வனவாக உடையவன்) அடியார்கள் பாவம்
அற இன்னருள் பயந்து, தோல் முதலியவை தனக்கு அழகு
செய்வனவாக உடையவன் என வினை முடிபு செய்க. இப்பாடலுக்குப்
பொழிப்பு உரைக்கப்பட்டது. துணி-துணித்தல். முதனிலைத்
தொழிற்பெயர்.