3683. குழலின்வரி வண்டுமுரன் மெல்லியன
       பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு
     ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு
     நோயுமிலராவர்
அழலுமழு வேந்துகையி னானுறைவ
     தவளிவணலூரே.                     5

     5. பொ-ரை: குழலின் ஓசைபோல் வண்டுகள் ஒலி எழுப்பி
மொய்க்கும் மெல்லிய அழகிய மலர்களைக் கொண்டு
இண்டைமாலைகட்டி, சிவபெருமான் திருவடிகளில் சார்த்தித்
தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, "இவரே முழுமுதற் கடவுள்" என்று
தொழுது போற்றுவர். அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்கட்கு,
உள்ளத்தால் வரும் துயரும், உடலால் வரும் நோயும் இல்லை.
அவ்வாறு அடியவர்கட்கு அருள்புரியும் இறைவன், நெருப்புப்போல்
ஒளிவீசும் மழுவேந்திய கையுடையவனாய் வீற்றிருந்தருளுவது
திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.  

    கு-ரை: அமரர்கூடி, குழலின் - புல்லாங்குழலின் ஓசைபோல,
வண்டு முரல் - வண்டுகள் ஒலிக்கின்ற, மெல்லியன - மெல்லியன
ஆகிய (பூவுலக) மலர்களும். பொன்மலர்கள் - (வானுலக மலர்கள் ஆகிய) பொன் மலர்களும் கொண்டு (கட்டிய) இண்டை -
இண்டைமாலையை. கடவுள் என்று - (இவரே) கடவுள் என்று,
கழலின் மிசை - திருவடியில், புனைவார் - சாத்துவார்கள்,
தொழுதலும் வழிபாடும் உடையார் - இவற்றின் பயனாக. இவர்கள்
உள்ளம் பற்றி வரும் துன்பமும், உடலம்பற்றிவரும் நோயும்
இலராவர்கள். (அங்ஙனமாக அருள்புரிந்து) கொதிக்கும் மழுவை
ஏந்திய கையையுடையவன் உறைவது அவளிவள் நல்லூரே. இது
பின் ஏந்திய கையையுடைவன் உறைவது அவளிவள் நல்லூரே. இது
பின்னீரடிக்கும் பொழிப்பு உரை. தேவர்கள் பொன்னுலகத்தவர்கள்.
அவர்களுக்குக் கற்பகவிருட்சம் தருவது பொன்மலர் ஆதலால்
அம்மலர்களையும் இங்கு நந்தவனங்களில் வண்டு மொய்க்கும்
மலர்களையும் கலந்து இண்டைகட்டிப் புனைகின்றனர். பொன்
மலர்களில் வண்டு மொய்க்காதாகலின் இங்ஙனம் கொள்க. அமரர்
கூடிவண்டு முரல் மெல்லியன (மலர்களும்) பொன்மலர்கள்
கொண்டு இண்டைகட்டி "இவரே (சிவ பெருமான்) கடவுளென்று
(உணர்ந்த உள்ளத்தினராய்) கழலின் மிசை புனைவார்" என்பது
முன்னிரண்டடியின் பொருள். இண்டை - மாலை விசேடம். வழிபாடு
-நூல்வழி, ஆசிரியன் கற்பித்தவழி (ஆசரணை) முறையே நியமமாகச்
செய்யும் சரியை கிரியை முதலியன. அசுரர்களால் வரும் துன்பமும்,
அவர்கள்பேரால் வரும் நோயும் அமரர்க்கும் உண்டு. ஆகலின்
அவை இலராவர் எனத் தேவர்கள் இங்கு வந்து வழிபட்டுப்
பேறுபெறுமாறு கூறியபடி. குழலின் - ஐந்தனுருபு ஒப்புப் பொருள்.