3701. பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர
       வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழறொழு
     மடியவர்
நண்ணிய பிணிகெட வருள்புரி பவர்நணு
     குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலி
     புறவமமே.                           1

     1. பொ-ரை: சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப் பாகமாகக் கொண்ட வடிவமுடையவர். பெருக்கெடுக்கும் கங்கை
நீரோடு, பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர்.
விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர். தம்
திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து
அருள்புரிபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த
பதியாவது, புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள்
நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: இயல் - பொருந்திய. உருவினர் - வடிவம் உடையவர்,
பெருகிய புனல் - கங்கை. விரவிய - கலந்த, பிறைக்கண்ணியர் -
பிறையாகிய அடையாளமாலையையுடையவர். கண்ணி -
இப்பொருளாதலைக் "கண்ணிகார்நறுங்கொன்றை" என்பதாலும் அறிக.
(புறம்.1) - கடுநடை விரைந்த நடையையுடைய (விடை) கடி - விரைவு
"கடியென்கிளவி......விரைவே விளக்கம்........ ஆகும்மே" (தொல். சொல். உரி 7) என்பதால் அறிக. அது கடு எனத் திரிந்து நின்றது. (கழல்
தொழும் அடியவரது) நண்ணிய - அடைந்த. பிணிகெட அருள்
புரிபவர், நணுகு - சேரும். உயர்பதி - (புகழ் ஒலி) மலி - மிகுந்த புறவமே.