3746. பட்டில கியமுலை யரிவைய ருலகினி
       லிடுபலி
ஒட்டில கிணைமர வடியின ருமையுறு
     வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை
     சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவ ருறைவது
     விளமரே.                          2

     2. பொ-ரை: சிவபெருமான், உலகில் பட்டாடையால்
மூடப்பட்ட முலைகளையுடைய பெண்கள் இடுகின்ற பலிகளை ஏற்க,
இசைத்துச் செல்கின்ற மரப்பாதுகைகளை அணிந்த திருவடிகளை
உடையவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தர்.
தூய்மையையும், ஞானத்தையும் உணர்த்தும் திருவெண்ணீற்றினைப்
பூசியுள்ளவர். இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சொல்லொணாப்
பேரழகிய தோற்றப் பொலிவுடன் நடக்கும் சிவபெருமான்
வீற்றிருந்தருளுவது திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: உலகினில் - உலகத்தில். பட்டு இலகிய -
பட்டாடையால் விளங்குகின்ற. அரிவையர் - பெண்கள். இடுபலி
ஒட்டு - போடும் பிச்சைக்கு இசைத்துச் செல்கின்ற. இலகு இணை
மரவடியினர் - விளங்கும் இரண்டாகிய பாதுகையை உடையவர்:-
பிட்சாடன கோலத்தில். உமை உறு - உமையம்மையார் (ஒருபாற்)
பொருந்திய, வடிவினர் - திருவுருவுடையவர். சிட்டு இலகு அழகிய
பொடியினர் - வசிட்டு முதலிய இறுதிகளையுடைய மந்திரோச்சாரணத
்தோடு அணியக்கூடிய விளங்குகின்ற அழகிய திருநீற்றையுடையவர்.
இனி விசிட்டம் என்பதன் திரிபு, சிட்டு என்று கொண்டு சிறந்த
(திருநீறு) எனினும் ஆம். மிசை சேர்வது ஓர் - விடையின்மேல் ஏறிச்
செல்வதாகிய. விட்டு இலகு - விட்டு விட்டுப் பிரகாசிக்கும். அழகு
ஒளி - அழகின் தோற்றப் பொலிவோடு. பெயர் அவர் - பெயர்தலை
(நடத்தலை) யுடையவர். உறைவது விளமரே. சேர்வதோர் பெயர்
அவர் என்க. மரவடி - மரத்தால் ஆகிய பாதுகை, பிட்சாடன
மூர்த்தியின் கோலத்தில் இதனைத் தரித்திருப்பதை யறிக.

“அடியிற்றொடுத்த பாதுகையும் அசைந்த
     நடையும் இசைமிடறும்
வடியிற் சிறப்ப நடந்தருளி
     மூழையேந்தி மருங்கணைந்த
தொடியிற் பொலிதோள் முனிமகளிர்,
     சுரமங்கையரை மயல்பூட்டிப்
படியிட்டெழுதாப் பேரழகாற் பலிதேர்
     பகவன் திருவுருவம்”

என்னும் காஞ்சிப் புராணத்தாலும் அறிக. “விட்டில கழகொளி
பெயரவர்” என்பதற்குப் “படியிட்டெழுதாப் பேரழகு” என்பது
வியாக்கியானம் போற் காணப்படுவதை யறிக.