3769. மழைவள ரிளமதி மலரொடு
       தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங்
     கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ
     டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியா ரிரவிடத்
     துறைவர்வேள் விக்குடியே.             3

     3. பொ-ரை: குளிர்ச்சியான இளம்பிறையும், கொன்றை,
ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய
நீண்ட சடையின் மீது, கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர். அவர் இழைகளால் நெய்யப்பட்ட
ஆடையணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில்,
மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில்
வீற்றிருந்தருளுவார். அவரே இரவில் திருவேள்விக்குடியில்
வீற்றிருந்தருளுவார்.

     கு-ரை: மேகத்திலுள்ள பிறையும், மலரும், நகுவெண்டலையும்
பொருந்திய நெடிய சடைமேல், கங்கைநீர் தங்கச்செய்த எமது சிவ
பெருமான், கழைவளர் புனல் - கரும்பு முதலிய பயிர்களைச்
செழிப்பிக்கும் புனல்’ கண்ட - செய்த என்னும் பொருளில்
வருவதைத் “திருநகரம் கண்ட படலம்” என வருதலாலும் அறிக.
கண்ணுதலாகிய கபாலியர் என்க. கபாலியர் - தலையோட்டையேந்தியவர், விழை(வு) வளர்துருத்தியார் - மேலும்
மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியார். அம்பிகையோடும்
துருத்தியாராய்ப் பகலில் அமர்ந்தபிரான் இரவிடத்து உறைவது
திருவேள்விக்குடியே என இப்பதிகத்து மேல் வரும் பாடல்கள்
தோறும் கொள்க.