3774. |
நீண்டிலங்
கவிரொளி நெடுமுடி |
|
யரக்கனிந்
நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ
னாள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்டநூன் மார்பின ரரிவையொ
டொருபக லமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 8 |
8.
பொ-ரை: நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும்
இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள
இராவணன் இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப்
பாலிடுவேன் என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை
அழித்தருளியவர் சிவபெருமான். அவர் பூணூல் அணிந்த
திருமார்பினர். அவர் உமாதேவியோடு பகலில், விரும்பி
வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும்.
இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுவார்.
கு-ரை:
பதித்த இரத்தினங்களால் நெடுந்தூரம் விளங்கிப்
பிரகாசிக்கும் ஒளியுடைய பெரிய முடியையுடைய, அரக்கன் - என்பது முற்பகுதியின் பொழிப்பு.
இந்நெடிய மலையைத் தோண்டியெடுத்து
அப்பால் இடுவேன் என்றெழுந்தவன், ஆள்வினை - முயற்சி,
கீழ்ப்படுத்தார் - மேல்எழாதவாறு அழித்தருளியவர்.
|