3777. விண்ணுலாம் விரிபொழில் விரைமணற்
       றுருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் மொலிகழலாடுவா
     ரரிவையொ டுறைபதியை
நண்ணுலாம் புகலியு ளருமறை
     ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலா மருந்தமிழ் பாடுவா
     ராடுவார் பழியிலரே.                 11

     11. பொ-ரை: ஒளிவிடும், ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து
திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு
வீற்றிருந்தருளுகின்ற, ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த
சோலைகள் நிறைந்த, மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய
திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி
அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல
ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய
தமிழ்ப்பதிகத்தைப்
பாடுபவர்களும், பரவசமடைந்து ஆடுபவர்களும்
எவ்விதமான பழியும், பாவமும் இல்லாதவர்களாவர்.

     கு-ரை: துருத்தி:- ஆற்றிடைக் குறையாதலால் விரைமணல்
துருத்தி என்றார். ஒண்(மை)கடைக்குறை, கழல் ஆடுவார் -
திருவடியைத் தூக்கி நின்றாடுவார். நண் - அனைவரும் புகலிடமாக
அடைவதாகிய - (புகலி) பாடுவார், ஆடுவார் பழி பாவங்கள்
இல்லாதவராவர். பாவம், உபலட்சணத்திற் கொள்ளப்பட்டது.