3810. விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
  சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே.              1

    1. பொ-ரை: தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு
என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம்
தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம்
அற்றவர்கள் ஆவர்.

     கு-ரை: தொழுது எழும் - தொழாநின்று துயில் எழும், சுண்ண
வெண் பொடி - சுண்ணம் போன்றதாகிய வெள்ளிய திருநீறு.
வெங்குரு மேவிய பொடியணிவீரேயென்க. “நீறணிந்த கோலம்
நெஞ்சம் பிணிக்கும் எழிலுடைமையான், அக்கோலம் தொழுது
எழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறு
ஆம்” என்னும் பேராசிரியர் உரை இங்குக் கருதத்தக்கது. தொழு
கழல் - தொழத்தகும் திருவடி, எண்ணுதல் - தியானித்தல், ஆறு
கோடிமாயாசத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கித்
தடுத்தலின் எண்ணுதலும் அரிதென்பர் எண்ணவல்லார், உம -
உம்முடைய (கழல்கள்).