3846. செற்றினின் மலிபுனற் சிறுகுடி மேவிய
  பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவ ரருவினை யிலரே.                   5

     5. பொ-ரை: பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய
திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி
உடைய சிவபெருமானே! பேறு பெற்ற பிறைச்சந்திரனை அணிந்த
திருமுடியுடைய உம்மை மனம் குைாந்து வழிபடுபவர்கள் உலகப்
பற்றற்றவர்கள். அதன் காரணமாக மேல்வரும் அருவினையும்
இல்லாதவராவர்.

     கு-ரை: செற்றினில் - பாத்திகளில். மலிபுனல் - குன்றாது
பாயும் நீர் வளமுடைய சிறுகுடி. செறுத்தல் - நீரைத் தேக்குதல்,
“செறுத்தோறுடைப்பினும் செம்புனலோடூடார், மறுத்துஞ்சிறை செய்வர்
நீர் நசைஇ வாழ்நர்” (நாலடியார் - 222). செறு - இ - செற்றி. இகரம்
வினைமுதற் பொருள் விகுதி. அதனால் பாத்தியைச் செறுவென்பது
காரணப்பெயராம். பெற்றிகொள்பிறை - இறைவன் முடியில் தங்கும்
பேற்றைக் கொண்ட பிறை. நஞ்சு - நைந்து, மனம் குழைந்து. நைதல்
- உருகுதலுக்குமுன் உறும் நிகழ்ச்சி. இதனை “என்புநைந்து உருகி
நெக்குநெக்குருகி”. நஞ்சு - போலி, நைந்து என்பதற்கு வினை முதல்
வருவித்துரைக்க, அற்றவரென்பதற்கும் இவ்விதியால் பற்று அற்றவர்
என்க. அதன் காரணமாக மேல்வருவினையும் இலராவர். நெஞ்சு
என்பது பிழைபட்டது.