3879. திரிதரு மாமணி நாகமாடத்
       திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக்க வெரியேந்தி யாடு
     நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்த மிலங்குகான
     லிராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி
     விமலர் செயுஞசெயலே.                 1

     1.பொ-ரை: அரிய மாணிக்கங்களையுடைய நாகங்களைப்
படமெடுத்து ஆடுமாறு தம் உடலில் அணிந்துள்ளவர் சிவபெருமான்.
அவர் மகாசங்கார காலத்தில் நரிகள் ஊளையிடும் சுடுகாட்டில்
நெருப்பெந்தி நடனம் செய்வார். மிக்க ஒளியுடைய முத்துக்கள்
விளங்கும் சோலைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிந்தருளுகின்ற, ஒளிக்கதிர் வீசும் வெண்மையான
பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்த, இயர்பாகவே பாசங்களின்
நீங்கியவரான சிவபெருமானின் அச்செயல், உயிர்கள் இளைப்பாறும்
பொருட்டுச் செய்யப்படும் அருட்செயல் என்பதை உணர்ந்தவர்களே
மெய்ஞ்ஞானிகள் ஆவர்.

     கு-ரை:திரிதரு - திரிகின்ற நாகம். திறைத்து - அணிந்து. தீ
அழல்வாய் - கொடிய நெருப்பில் நின்று. (நரி) கதிக்க - பாட.
கதித்தல் - சொல்லல், இங்குப் பாடுதல் என்னும் பொருளில் வந்தது.
மயானம் ஆதலில் நரி கூவியது பாடல் தோன்றியது, எரி ஏந்தி
ஆடும் நலம்; உயிர்களின் இளைப்பொழித்தற்குச் செய்யும் நன்மை,
மயானத்து ஆடல் மாக சங்காரத்தைக் குறிப்பது. எரி கதிர் முத்தம்;-
முத்துத் தண்மையுடையதாதலின், எரி, ஒளிக்கு மட்டும் கொள்க.
இராமேச்சுரம் மேய விமலர் செயும் செயலாகிய, நாகம் ஆடத்
திறைத்து, நரி கதிக்க, எரியேந்தி, அழல்வாய் நின்று ஆடும்
நலத்தைத் தெரிந்துணர்வாதே ‘மெய்ஞ்ஞானிகளாவார்’ என்பது
குறிப்பெச்சம். இப்பெருளுக்கு நலமே என்பதின் ஏகாரத்தைப்
பிரித்துக் கூட்டுதல் பொருத்தமாகும்.