3888. பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப்
       பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள்
     புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலு
     மிராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும்
     பரமர் செயுஞ்செயலே.                 10

     10.பொ-ரை:முதுகிலும், மார்பிலும் தடுக்கை அணிந்து,
ஒதுக்கப்பட்ட இடங்களில் திரியும் சமணர்களும், பொன் போன்ற
சீவரம் என்னும் ஆடையைப் போர்த்த புத்தர்களும் கூறும் புறங்
கூற்று மொழிகளைக் கேளாமல், யாழிசை போல் வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளி, பல்லையுடைய பெரிய மண்டையோட்டில்
பலியேற்றுத் திரியும் சிவபெருமான் செய்யும் செயல்களைக் கேட்டு
உணர்ந்து, அவரை வழிபட்டு உய்திபெறுங்கள்.

     கு-ரை: முன் - மார்பிலும். பின் - முதுகின் புறத்திலும். இடு
- தொங்க விடப்பட்ட. தட்டை - தடுக்கை. சாத்தி - அணிந்து.
பிரட்டே - ஒதுக்கப்பட்ட இடங்களில், திரிபவர்களாகிய சமணரும்
சீவரம் என்னும் ஆடையைப் போர்த்தவர்களாகிய புத்தர்களும். புறம் கூறல் - அல்லாத பொருள்களைக் கூறுதலைக் கேளாமல், இனிய
நெடிய சோலையில் வண்டுகள் யாழ் ஓசையைப்போல ஒலிக்கும்
இராமேச்சுர மேய பரமர் செய்யும் செயலே கேட்டுணர்ந்து உய்தி
கூடுமின் என்பதாம். பல்நெடும் வெண்தலை கொண்டு உழலும் -
பல்லையுடைய பெரிய வெள்ளிய கபாலம் கைக்கொண்டு
(பிச்சைக்குத்) திரியும் (பரமர்).