3906. உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு
       உமையோ டுடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச்
     சுடர்ச்சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப்
     பயின்றா ரிடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணியறா
     வலம்புர நன்னகரே.                   6

     6. பொ-ரை: தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு, கருநிறமும்
ஒளியுமுடைய நஞ்சைத் தாம் உண்டவர் சிவபெருமான். உமா
தேவியை உடனாகக் கொண்டவர். மணம் பொருந்திய திரு
வெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர். சுடர்விடும் சோதியாய்
விளங்குபவர். பல்வேறு பண்களில் சிவபூதங்கள் நடனம் செய்பவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பலவகைப்பட்ட பறை
முதலிய வாத்தியங்களின் முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும்
நன்னகர் ஆகும்
.

     கு-ரை: உண்ண - தேவர்கள் அமுது உண்ணும் பொருட்டு.
அண்ணத்து வாசுகி யென்னும் பாம்பின்மேல் வாலில். ஒளி -
அடங்கியிருந்த. நஞ்சம் - விடம் (வெளிப்படவே.) உண்டு - அதனை உண்டு. உண்ண என்பதற்கு வினை முதலும் செயப்படு பொருளும்
வருவிக்க. சுடர் - கதிரையுடைய. சோதி - ஒளியானது. பண்ண -
பண்களினுடைய. வண்ணத்தன - கூறுபாடுகளை யறிந்தனவாகிய
பூதங்கள். பாணி செய்ய - பாட. பயின்றார்க்கு - ஆடல்
புரிந்தவராகிய சிவ பெருமானுக்கு வண்ண வண்ணம் பலவகையான.
பறை - வாத்தியங்களின் (சிறப்புப் பெயர் - பொருப்பெயர்க்காயிற்று)
பாணி - ஓசை. அறா - நிங்காத வலம்புர நன்னகர்.