3911. நல்லிய னான்மறை யோர்புகலித்
       தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான்
     வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல
     வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச்
     சிவலோகஞ் சேர்வாரே.               11

     11. பொ-ரை: நல்லொழுக்கமுடைய, நான்கு வேதங்களையும்
நன்கு கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும்
திருத்தலத்தில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன், புலியின் தோலை
ஆடையாக உடுத்திய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருவலம்புரம் என்னும் நன்னகரைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள்
பத்தையும் சொல்ல வல்லவர்கள், தொல்வினை நீங்கிச் சிவலோகம்
சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற சிவபெருமானின்
சேவடிகளைச் சேர்ந்திருப்பர்.

     கு-ரை: நல் இயல் - நல்ல ஒழுக்கத்தையுடைய நால்மறையோர். வல்லியம்தோல் - புலியின் தோலை. உடை ஆடையினான் -
இடுப்பில் உடுக்க ஆடையாய்க் கொண்டருளியவன். சிவலோகம்
சென்று அணுகி முத்திச் செல்வத்தை யருள்வானாகிய சிவபெருமான்
சேவடியைச் சேர்ந்திருப்பர் என ஈற்றடிக்குப் பொருள் கொள்க.